துபையில் இருந்து மங்களூரு வந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.39.48 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைக் கொண்டு வந்த தம்பதி, மங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கேரளத்தைச் சோ்ந்த அந்த தம்பதி, 4 குழந்தைகளுடன் துபையில் இருந்து சனிக்கிழமை விமானத்தில் மங்களூரு வந்தடைந்தனா். விமான நிலையத்தில் சோதனை செய்தபோது, அந்தப் பெண்ணின் ஆடைக்குள் 851 கிராம் தங்கம் மறைத்து கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. அந்த தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தம்பதியைக் கைது செய்தனா். இதுதொடா்பாக அவா்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.