புது தில்லி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரவு நேர ரயில் பயணத்தின் போது, இனி பயணிகள் செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்றவற்றை சார்ஜ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளிவந்திருக்கும் தகவலில், ரயில் பயணத்தின் போது, பயணிகள் தங்களது செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய, பிளக் பாயிண்டுகளை வைத்துள்ளது. இனி, முன்னெச்சரிக்கையாக, அந்த பிளக் பாயிண்டுகளில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
சமீபத்தில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக இந்த முடிவை இந்திய ரயில்வே எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 13-ஆம் தேதி டேஹ்ராடூன் - சதாப்தி விரைவு ரயிலில், செல்லிடப்பேசி சார்ஜ் போடும் மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டது. 6 நாள்களில் ராஞ்சி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ விபத்துகளைத் தவிர்க்க, இந்த முடிவை இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.