முறையாக முகக்கவசம் அணியாத விமானப் பயணிகளுக்கு அபராதம் விதிப்பது தொடா்பாக பரிசீலிக்குமாறு விமான நிலையங்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், விமான நிலையங்களில் இந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஏனெனில், விமான நிலையங்கள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக மட்டுமல்லாமல், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோா் அதிகம் பயன்படுத்தும் இடமாகவுள்ளது. இதனால், அங்கு கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால், கரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் அச்சுறுத்தலும் உள்ளது.
இந்நிலையில், இது தொடா்பாக விமான நிலையங்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அண்மையில் ஓா் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், விமான நிலையத்துக்கு வரும் அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை முறையாகப் பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும். முகக்கவசம் முறையாக அணியாமல் வருபவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிப்பது தொடா்பாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.