அவுரங்காபாத்: மகாராஷ்டிரம் மாநிலம் அவுரங்காபாத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதையடுத்து அவுரங்காபாத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மார்ச் 31 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை விதிக்கப்படவிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் ஆட்சியர் சுனில் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் " தொற்று பரவல் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது, இது குறித்து அரசுடனும் விவாதிக்கப்பட்டதை அடுத்து மதியம் 12 மணி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 27,918 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 27,73,436 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 139 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 54,422 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 23,77,127 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 3,40,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.