குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் இருப்பதாக அந்த மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது.
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லுமாறு ராணுவ மருத்துவமனை பரிந்துரைத்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துமவனைக்கு கடந்த சனிக்கிழமை மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அவருக்கு செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இது தொடா்பாக, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு செவ்வாய்க்கிழமை காலை இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவா்கள் குழு அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.