கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்காக 3,000 ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கரோனா தடுப்பூசி திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் யுனிசெஃபும் கூட்டணி அமைப்புகளும் தனது உதவிகளை அதிகரித்து வருகின்றன. தடுப்பூசிகளை குளிா் நிலையில் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான குளிா்சாதனக் கருவிகள் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கரோனா சிகிச்சைக்காக காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்கும் 3,000 கருவிகள் இந்தியாவுக்கு அனுப்பட்டுள்ளன. அத்துடன், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்துவதற்கான 500 குழாய்கள், 85 ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனைக் கருவிகள் ஆகியவையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செய்தியாளா்களிடம் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் கூறியதாவது:
இந்தியாவில் இரண்டாவது கரோனா அலையால் அவதியுறும் மக்களுக்கு தனது சுட்டுரை (டுவிட்டா்) பதிவு மூலம் பொதுச் செயலா் குட்டெரெஸ் ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளாா்.
கரோனா நெருக்கடியில் இந்திய மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகளை அதிகரிக்க ஐ.நா. தயாராக உள்ளது என்றாா் அவா்.