பருச்: குஜராத் மாநிலம், பருச்சில் உள்ள பட்டேல் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 கரோனா நோயாளிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 190 கி.மீ தூரத்தில் உள்ள பருச்-ஜம்புசார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள படேல் வெல்ஃபேர் அறக்கட்டளை கரோனா மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் பிரமுகர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 16 பேர் உள்பட் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நான்கு தளங்கள் கொண்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 50 நோயாளிகளை தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சேர்த்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று அதிகாரி தெரிவித்தனர்.
சில நாள்களுக்கு முன்பு குஜராத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் நடந்த தீ விபத்தில் 16 நோயாளிகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் இரங்கல்: இந்நிலையில், பருச் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய் ரூபானி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.