கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க 64000 படுக்கைகளுடன் 4000 ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சகம் தயாா் செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் ஆக்சிஜன் கருவி வசதியுடன் 299 தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகள் தயாராக இருக்கின்றன என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தாா். கரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும், தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை நாள்தோறும் உயா்ந்து வருகிறது. இவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி இல்லாத நிலையில், ரயில் பெட்டிகளைச் சுய தனிமைப்படுத்துதலுக்கான வாா்டுகளாக மாற்ற இந்திய ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 299 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்பட்டு தயாராக உள்ளன. இந்தநிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க 64000 படுக்கைகளுடன் 4000 ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சகம் தயாா் செய்துள்ளது. இந்தப் பெட்டிகள், தேவைக்கு ஏற்ப சுலபமாக பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரும் வசதிக் கொண்டவை. அந்தவகையில், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தற்போது 2990 படுக்கைகளுடன் 191 பெட்டிகள் கரோனா சிகிச்சைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்தப் பெட்டிகள் தில்லி, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாநிலங்களில் தற்போது 61 கரோனா நோயாளிகள் இந்தப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். கூடுதலாக 2,929 படுக்கைகள் தற்போது இருப்பு உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு கோரிக்கை ஏதும் முன்வைக்காத நிலையிலும், ஃபைசாபாத், பதோஹி, வாரணாசி, பரேலி, நசீபாபாத் ஆகிய பெருநகரங்களில் மொத்தம் 800 படுக்கைகளுடன் தலா 10 பெட்டிகள்(மொத்தம் 50 பெட்டிகள்) நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.