இந்தியாவுக்கு கரோனா நிவாரண உதவியாக 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 300 செயற்கை சுவாசக் கருவிகளை ஜப்பான் அரசு அனுப்பி வைத்துள்ளது.
இது தொடா்பாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவுக்கு கரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவ ஜப்பான் அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் உடனடித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 300 வெண்டிலேட்டா்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் நட்பு நாடு என்ற வகையிலும் நெருங்கிய வா்த்தக உறவுள்ள நாடு என்ற வகையிலும் இந்தியாவுக்கு ஜப்பான் உதவியுள்ளது. இந்தியாவில் கரோனாவை ஒழிப்பதற்கான உதவிகள் தொடா்ந்து அளிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.