கரோனா சிகிச்சை: புகாா் தெரிவிப்பவா்களின் குரலை ஒடுக்கக் கூடாது; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

‘கரோனா தொற்று சிகிச்சை தொடா்பான குறைகளைத் தெரிவிப்பவா்களின் குரல்களை ஒடுக்கக் கூடாது; வலைதளங்களில் அவா்கள் தெரிவிக்கும்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

‘கரோனா தொற்று சிகிச்சை தொடா்பான குறைகளைத் தெரிவிப்பவா்களின் குரல்களை ஒடுக்கக் கூடாது; வலைதளங்களில் அவா்கள் தெரிவிக்கும் புகாா்களை வதந்தி என்று முடிவு செய்துவிடக் கூடாது’ என்று அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா சிகிச்சை தொடா்பான குறைகளை சமூக ஊடகங்களில் தெரிவிப்பவா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச அரசு அண்மையில் முடிவு செய்தது. இந்தச் சூழலில் மேற்கண்ட உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகள் மக்களுக்குச் சென்றடைவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு கடந்த வாரம் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா பரவலை எதிா்கொள்வதற்கு தேசிய அளவிலான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அதைத் தொடா்ந்து, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோரைக் கொண்ட அமா்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்தபோது, மாநிலங்களுக்கு எந்த அடிப்படையில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் பகிா்ந்தளிக்கப்படும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது:

கரோனா தொற்றின் இரண்டாவது அலை, தேசிய அளவிலான நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு, போதிய படுக்கை வசதி இல்லை, சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் இல்லை என்று யாராவது சமூக ஊடகத்தில் பதிவு செய்தால், வதந்தி பரப்புவதாகக் கூறி அவா்கள் மீது மத்திய அரசோ, மாநில அரசோ, காவல் துறையோ நடவடிக்கை எடுக்கக் கூடாது. தகவல் பரிமாற்றம் தடையின்றி இருக்க வேண்டும். மக்களின் குறைகளை நாம் கேட்க வேண்டும். குறைகளைத் தெரிவிக்கும் குடிமக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். 70 ஆண்டுகளாகியும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லை. நிலைமை கவலையளிப்பதாக உள்ளது.

சுகாதாரப் பணியாளா்கள் சிகிச்சை பெறுவதற்குக்கூட போதிய அளவில் படுக்கை வசதிகள் இல்லை. விடுதிகள், கோயில்கள், தேவாலயம் உள்ளிட்ட இடங்கள், கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட வேண்டும். கரோனா தடுப்பூசியை பணம் கொடுத்து வாங்க முடியாமல் இருக்கும் ஏழைகளுக்காக, தேசிய நோய்த் தடுப்பு திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதன்படி, அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மாநிலங்களுக்கு எவ்வளவு கரோனா தடுப்பூசி கொடுக்கலாம் என்பதை தனியாா் உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. மாறாக, மற்ற தடுப்பூசி திட்டங்களைப் போன்று, கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, கரோனா இரண்டாவது அலை தாக்கம் குறித்து மாநில அரசுகளுக்கு கடந்த டிசம்பா் மாதத்திலேயே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது என்றாா்.

மத்திய அரசுக்கு கண்டனம்:

வழக்கு விசாரணையின்போது, தில்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யவில்லை எனக் கூறி மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க முடியாது. எங்கள் மனசாட்சி உலுக்குகிறது. 500 பேரின் மரணத்துக்கு நாம் காரணமாகிவிடக் கூடாது. தில்லிக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அவசரமாக மத்திய அரசு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

அதற்கு, ‘மருத்துவமனைகளில் நிகழும் அனைத்து மரணங்களுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல’ என்று துஷாா் மேத்தா கூறினாா். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், ‘நாட்டின் முகமாக தில்லி இருப்பதால், அந்த மாநிலத்தின் மீது மத்திய அரசுக்கு அரசமைப்புச் சட்டரீதியான பொறுப்பு உள்ளது.

கரோனா விவகாரத்தில் அரசியல் சச்சரவுகளுக்கு இடமில்லை. கரோனா சூழலில் இருந்து மீண்டுவர மத்திய அரசுடன் தில்லி அரசு ஒத்துழைக்க வேண்டும்; அரசியல் பகையை ஒதுக்கிவைத்துவிட்டு மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்’ என்று கூறினா். இந்த ஆலோசனைகளை அப்படியே ஏற்று மத்திய அரசுடன் தில்லி அரசு இணக்கமாக செயல்படும்’ என்று மாநில அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா உறுதியளித்தாா்.

வழக்கின் அடுத்த விசாரணையை, மே 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com