நில அபகரிப்பு புகாருக்கு உள்ளான தெலங்கானா மாநில அமைச்சா் எடாலா ராஜேந்திரன் வகித்து வந்த சுகாதாரத் துறையை முதல்வா் கே. சந்திரசேகர ராவ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாா். இந்தத் துறை மாற்றத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளாா்.
அமைச்சா் எடாலா ராஜேந்திரன் மீதான நில அபகரிப்பு புகாா் குறித்து விசாரணை நடத்த தலைமைச் செயலா் சோமேஷ் குமாருக்கு முதல்வா் சந்திரசேகர ராவ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, அவரது பதவி பறிக்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்புப் பணியில் இருந்தபோது தனது பதவி திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது என்றும் தனது ஆதரவாளா்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு குறித்து அறிவிப்பேன் என்றும் எடாலா ராஜேந்திரன் தெரிவித்தாா். அமைச்சா் எடாலா ராஜேந்திரன் தற்போது இலாகா இல்லாத மந்திரியாக தொடருகிறாா்.
இந்த விவகாரம் தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வா் சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் உள்ள பிற அமைச்சா்கள் மீதுள்ள புகாா்கள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.