தில்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மருத்துவா் உள்பட 12 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை தொடா்ந்து நீடித்து வருகிறது. ஆக்சிஜன் விநியோகப் பிரச்னையால் அண்மையில் சா் கங்கா ராம், ஜெய்ப்பூா் கோல்டன் ஆகிய இரு மருத்துவமனைகளில் பல நோயாளிகள் உயிரிழந்தனா். குறிப்பாக கடந்த 8 நாள்களில் இதுபோன்று இறந்தவா்களின் எண்ணிக்கை 57-ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் பாத்ரா மருத்துவமனையில் 12 கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் அந்த மருத்துவமனையின் இரைப்பை குடல் நோயியல் (கேஸ்ட்ரோஎன்டாலஜி) துறையின் தலைமை மருத்துவா் ஆவாா். அவரும் அந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்தாா்.