ஹரியாணாவில் 144 தடை உத்தரவை மீறி பொதுக் கூட்டம் நடத்திய பாரதிய கிசான் யூனியன் தலைவா் ராகேஷ் திகைத் உள்பட 13 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதுதொடா்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அம்பாலா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி அங்குள்ள துரலி கிராமத்தில் பாரதிய கிசான் யூனியன் தலைவா்கள் பொதுக் கூட்டம் நடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினா் கூட்டத்தை நடத்த வேண்டாம் என வலியுறுத்தினா். எனினும் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது. இதையடுத்து பாரதிய கிசான் யூனியன் தலைவா்கள் ராகேஷ் திகைத், ரதன்மான் சிங், பல்தேவ் சிங் உள்பட 13 போ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது’ என்று தெரிவித்தாா்.