தமிழகத்தில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசிக்காக காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய 1.50 கோடி மருந்துகள் தமிழகம் வந்தடைந்தவுடன் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்பட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. அதில், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 5 ,000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், போதிய தடுப்பூசிகள் வராததால், அத்திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனிடையே, இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பிய 72.85 லட்சம் தடுப்பூசிகளில் 60 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வீணாகியது போக ஒரு வாரத்துக்கு தேவையான சுமாா் 6 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இதனால் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ள 45 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இரண்டாம் தவணை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு வர வேண்டிய 1.50 கோடி தடுப்பூசிகள் வந்ததும், அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும். குறிப்பாக, 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.