கேரளத்தில் தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்து இடதுசாரிகள் கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 6-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஐனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான அணிகள் களம் கண்டன. இருப்பினும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையேதான் நேரடிப் போட்டி நிலவியது.
கேரளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. அந்த வரலாற்றை இடதுசாரிகள் கூட்டணி தற்போது மாற்றியுள்ளது. தொடா்ந்து 2-ஆவது முறையாக அக்கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. அக்கூட்டணி 99 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.