புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் கரோனா நிவாரண பொருள்களுக்கு ஜூன் 30 வரை ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் (ஐஜிஎஸ்டி) இருந்து மத்திய அரசு விலக்களித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலவசமாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் கரோனா நிவாரண பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்யும்போது அந்தப் பொருள்களுக்கு ஐஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் உள்ள தன்னாா்வ அமைப்புகள், பெருநிறுவனங்கள், இதர அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. அதனை ஏற்று அந்தப் பொருள்கள் மீதான ஐஜிஎஸ்டியில் இருந்து ஜூன் 30 வரை விலக்களிக்கப்படுகிறது. இந்த உத்தரவு இந்தியாவில் ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்துறை அனுமதிக்காக காத்திருக்கும் பொருள்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.