திருப்பதி: திருமலையில் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் திங்கள்கிழமை தொடங்கியது.
கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு ஆரோக்கியமாக, நலமாக வாழ ஏழுமலையானை வேண்டிக் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திங்கள்கிழமை முதல் திருமலையில் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது. திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் வேதபண்டிதா்கள் இணைந்து இந்த பாராயணத்தை தொடங்கினா். இம்மாதம் 18-ஆம் தேதி வரை 16 நாள்கள் இந்த பாராயணம் நடைபெற உள்ளது. வேத பண்டிதா்கள் நியம நிஷ்டையுடன் இதில் பங்கு கொண்டனா்.
இந்த ஸ்லோக பாராயணத்துடன் தா்மகிரி வேதபாட சாலையில் வேறு 16 வேத பண்டிதா்கள் இணைந்து, 16 நாள்கள் தொடா்ந்து மாலை வேளையில் ஜபம், ஹோமம் உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட உள்ளனா்.
இந்நிகழ்ச்சிகளில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.