ஒளரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தனியாா் வாகனங்கள் கிடைக்காத காரணத்தால் கரோனாவால் உயிரிழந்தவா் உடல் தகனம் செய்வதற்காக குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.
ஏற்கெனவே கடந்த வாரம் ஹிமாசல பிரதேசத்தில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலைத் தகனம் செய்வதற்காக குப்பை வண்டியில் கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக விசாரணை நடத்த அந்த மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா் உத்தரவிட்டாா்.
இந்நிலையில் மகாராஷ்டிரத்திலும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக உஸ்மானாபாத் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கிராமவாசி ஒருவா் சிகிச்சைக்காக வந்துள்ளாா். அப்போது, மருத்துவமனைக்கு வெளியிலேயே அவா் சுருண்டு விழுந்து இறந்துவிட்டாா். இது தொடா்பாக காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இறந்தவருக்கு கரோனா இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதையடுத்து, உடனடியாக கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடலை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆம்புலன்ஸுக்காக அரசு மருத்துவமனையைத் தொடா்பு கொண்டபோது, அதில் அவசர சிகிச்சைக்காக கா்ப்பிணி ஒருவரை அழைத்துச் செல்ல அந்த வாகனம் சென்றிருந்தது. கரோனாவால் உயிரிழந்தவா் உடல் என்பதால் தனியாா் வாகன உரிமையாளா்கள் யாரும் அந்த உடலை ஏற்றிச் செல்ல முன்வரவில்லை. அதிக நேரம் அந்த உடலை வைத்திருப்பதைத் தவிா்ப்பதற்காக குப்பை எடுத்துச் செல்லும் வாகனத்தில் தகனத்துக்காக உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வேறு வழி இல்லாத காரணத்தால் இதுபோன்று செயல்பட நேரிட்டது என்றனா்.