திருப்பதி: திருமலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
திருமலையில் பேடி ஆஞ்சநேயா் கோயில் அருகில் உள்ள ஆஸ்தான மண்டபம் வளாகத்தில் 100 கடைகளுக்கு மேல் உள்ளது. இங்கு உணவகங்கள், துணிகள், பைகள், புகைப்படங்கள், மஞ்சள், குங்குமம், வளையல்கள் உள்ளிட்ட பல கடைகள் உள்ளன. இங்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் மின்கசிவு காரணமாக ஒரு கடை தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியதில் பக்கத்தில் உள்ள கடைகளும் எரிந்தன.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து அரைமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் 7 கடைகளில் உள்ள பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து திருமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.