காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மக்களவை உறுப்பினர்களுடன் கரோனா நிலவரம் குறித்து நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தற்போதைய கரோனா நிலவரம், கரோனா தடுப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
முன்னதாக, கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி கொள்கை பாரபட்சமானாது. இளைஞர்களை முற்றிலுமாக கைவிடுவது போன்றது. எனவே மத்திய அரசு இந்த முடிவை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 3,980 போ் உயிரிழந்துள்ளனர்.