பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தெலங்கானாவில் பொதுமுடக்கம் விதிக்கும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்,“ மாநிலத்தில் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் விதிக்கும் திட்டம் இல்லை” என தெரிவித்தார்.
மேலும் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த கால அனுபவங்களை மீண்டும் அனுபவிக்க தயாராக இல்லை எனவும் கூறினார்.
பொதுமுடக்கம் விதிக்கப்பட்டால் தெலங்கானாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றால் மீண்டும் தெலங்கானா வருவதில் சிக்கல் ஏற்படும் எனவும் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்,
அதே நேரத்தில், அத்தியாவசிய பொருட்கள், பால், காய்கறிகள், பழங்கள், அவசர மருத்துவ சேவைகள், சுகாதார வசதிகள் மற்றும் அவசர, அத்தியாவசிய சேவைகளை வழங்குவதை நிறுத்த முடியாது எனத் தெரிவித்த அவர் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.