புது தில்லி: நாட்டில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சிறைச்சாலைகளில் கடந்த ஆண்டு யாரெல்லாம் பிணை அல்லது பரோலில் விடுவிக்கப்பட்டனரோ அவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மார்ச் மாதம் சிறைச்சாலைகளிலிருந்து பரோல் அல்லது பிணையில் விடுவிக்கப்பட்ட அனைவரையும், தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் எந்தவிதமான மறுஆய்வும் இன்றி உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக பரோல் அல்லது பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளை 90 நாள்கள் பரோலில் விடுவிக்க உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு லட்சம் சிறைக் கைதிகளின் நலனைக் காக்கும் வகையிலும், அவர்களும் நலமாக வாழ உரிமை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.