உத்தரப் பிரதேசத்தில் பகுதி நேர ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நேற்று மட்டும் 26,847 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,80,315 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு மேலும் 298 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 15,170ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் உத்தரப் பிரதேசத்தில் பகுதி நேர ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலர் நவ்நீத் செகல் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் பகுதி நேர ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் அனுமதிக்கப்படும், மேலும் தடுப்பூசி போடும் பணி தொடரும். தொற்றுநோய்களின் சங்கிலியை உடைக்க முடிவு எடுக்கப்பட்டது என்றார்.