ஐஐடி ஜோத்பூரில் 25 மாணவர்கள் உள்பட 29 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணை பதிவாளர் அமர்தீப் சர்மா கூறியதாவது,
கடந்த மே 5-ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா சோதனையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 29 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து, வளாகத்தில் மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் செய்முறைத் தேர்விற்காக வந்ததால், தொற்று வளாகத்தில் மேலும் பரவத் தொடங்கியது என்று அவர் கூறினார்.
பொதுவாக, மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளுக்குப் பிறகு தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்குவார்கள். ஆனால் பல மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்து வருகின்றது. மேலும் வளாகத்தில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லூரிக்கு வரும் ஒவ்வொரு மாணவர் மற்றும் ஊழியர்களின் மாதிரிகள் சோதனை எடுத்து, அறிக்கை வரும்வரை அவர்களைத் தனிமை மையத்தில் வைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.