மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக பலியாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பலியாகிறவர்களின் சடலங்கள் ஆறுகளில் தூக்கிவீசப்பட்டு பிகாரை வந்தடைவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, “கரோனாவால் பலியான கணக்கில்லா மனித உடல்கள் நதிகளில் அடித்து செல்லப்படுகின்றன. கரோனா சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான தங்களது உரிமைகளை இழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,“ பிரதமர் மோடி தனது ஆரஞ்சு நிற கண்ணாடியைக் கழற்றி வைத்துப் பார்த்தால் தான் செண்ட்ரல் விஸ்டாவைத் தவிர்த்த மற்ற காட்சிகளும் கண்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.