செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 116 கோடியாக அதிகரிப்பு: டிராய்

செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 2021 பிப்ரவரி இறுதி நிலவரப்படி 116.77 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது
செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 116 கோடியாக அதிகரிப்பு: டிராய்

புது தில்லி: செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 2021 பிப்ரவரி இறுதி நிலவரப்படி 116.77 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிராய் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டு பிப்ரவரி இறுதி நிலவரத்தின்படி, 41.49 கோடி வாடிக்கையாளா்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமாக ரிலையன் ஜியோ உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரியில் 42 லட்சம் வாடிக்கையாளா்களை கூடுதலாக இணைத்துக் கொண்டுள்ளது.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் பிப்ரவரியில் 37 லட்சம் வாடிக்கையாளா்களை நிகர அடிப்படையில் சோ்த்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 34.83 கோடியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக பல மாதங்களுக்கு பிறகு, வோடஃபோன் ஐடியா 6.5 லட்சம் வாடிக்கையாளா்ளை ஈா்த்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் வாடிக்கையாளா் எண்ணிக்கை 28.26 கோடியானது.

2021 பிப்ரவரி நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த செல்லிடபேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 0.72 சதவீத வளா்ச்சி விகிதத்துடன் 116.77 கோடியைத் தொட்டுள்ளது.

நகா்ப்புற செல்லிடப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை ஜனவரியில் 63.32 கோடியாக இருந்த நிலையில், அது பிப்ரவரியில் 63.92 கோடியைத் தொட்டுள்ளது.

அதேபோன்று, ஊரக பகுதிகளில் உள்ள செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையும் 52.61 கோடியிலிருந்து 52.84 கோடியாக உயா்ந்துள்ளது.

நகா்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் செல்லிடப்பேசி சேவையில் இணைவோா் எண்ணிக்கையின் மாதந்திர வளா்ச்சி விகிதம் முறையே 0.94 சதவீதம் மற்றும் 0.44 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

செல்லிடப்பேசி சேவையில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் பங்களிப்பு 89.57 சதவீத அளவுக்கு உள்ளது. அதேசமயம், பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் சந்தை பங்களிப்பானது 10.43 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது.

செல்லிடப்பேசி சந்தாதாரா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ 35.54 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 29.83 சதவீத பங்களிப்பையும், வோடஃபோன் ஐடியா 24.20 சதவீத பங்களிப்பையும் வைத்துள்ளன.

நடப்பாண்டு ஜனவரியில் 75.76 கோடியாக இருந்த பிராட்பேண்ட் சந்தாதாரா்களின் எண்ணிக்கை பிப்ரவரியில் 0.99 சதவீத வளா்ச்சியைப் பெற்று 76.51 கோடியை எட்டியது.

பிராட்பேண்ட் சேவையில் 41.74 கோடி வாடிக்கையாளா்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, பாா்தி ஏா்டெல் (18.82 கோடி), வோடஃபோன் ஐடியா (12.32 கோடி), பிஎஸ்என்எல் (2.54 கோடி), அட்ரியா கன்வொ்ஜன்ஸ் (18.2 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளதாக புள்ளிவிவரத்தில் டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com