புது தில்லி: இந்தியாவில் தொடா்ந்து 7-வது நாளாக கரோனா தினசரி புதிய பாதிப்புகளைவிட குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,23,55,440 இன்று அதிகரித்துள்ளது. தேசிய அளவில் தொற்றிலிருந்து குணமடைவோா் வீதம் 86.74 சதவீதமாக உயா்ந்துள்ளது. மற்றொரு நம்பிக்கை அளிக்கும் தகவலாக, நான்காவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளது.
இந்தியாவில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,29,878 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரு நாளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையிலேயே மிக அதிகமாக வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,55,010 பரிசோதனைகள் செய்யப்பட்டன.
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 3,874 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவா்களில் 72.25 சதவீதத்தினா், 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 594 பேரும், அதைத்தொடா்ந்து கா்நாடகாவில் 468 பேரும் உயிரிழந்துள்ளனா்.
நம் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 18.70 கோடியைக் கடந்துள்ளது.