புது தில்லி: டவ்-தே புயலைத் தொடர்ந்து தற்போது யாஸ் புயல் உருவாகி நாளை ஒடிசா-மேற்கு வங்கத்துக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
இந்த நிலையில் புதிய புயல் உருவானால் அதற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று பார்த்தால், அடுத்து புதிய புயல் உருவானால் பாகிஸ்தான் வழங்கியிருக்கும் குலாப் என்று பெயர் சூட்டப்படும்.
டவ்-தே பெயரை மியான்மர் வழங்கியிருந்த நிலையில், ஓமன் வழங்கியிருந்த யாஸ் என்ற பெயர் தற்போது உருவாகியிருக்கும் புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது. யாஸ் என்றால் நறுமணம் மிக்க மல்லிகை என்று அர்த்தமாகும். அதாவது அதிதீவிர புயலுக்கு பூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒரு வேளை யாஸ் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் தேர்வு செய்து வழங்கியிருக்கும் குலாப் என்ற பெயரும், அதனைத் தொடர்ந்து அடுத்த புயலுக்கு கத்தார் வழங்கியிருக்கும் ஷாஹீன் என்ற பெயரும் சூட்டப்படும் என்பது, புயல்களுக்கான பெயர் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.
புயல்களைப் பற்றிய எச்சரிக்கைத் தகவல்களை எளிமையாக்கும் வகையில் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியக் கடற்பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004-ஆம் ஆண்டில் தொடங்கியது.
ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகும்போது, அதுபற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவுகள், தாய்லாந்து, ஈரான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகள் புயல்களுக்கு தலா 1 பெயரை பரிந்துரை செய்வார்கள்.
ஒவ்வொரு புயல்களுக்கும் அகர வரிசையாக ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த பெயரை வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.