காந்திநகர்: கருப்பு பூஞ்சை பாதித்தவர்களில் 50% நோயாளிகள் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படாமலேயே குணமடைந்திருப்பதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் ஒரே வழிமுறையைப் பின்பற்றவும், வழிகாட்டுதல்களையும் குஜராத் அரசு வெளியிட்டது. மேலும், இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளது. அதில், கிருமி தொற்றுப் பரவலைக்கட்டுப்படுத்த வழங்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகள் இல்லாமலேயே கருப்பு பூஞ்சை பாதித்த 50 சதவீத நோயாளிகள் குணமடைவதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 11,717 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிக நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,859 நோயாளிகளும், மகாராஷ்டிரத்தில் 2,770 நோயாளிகளும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.