கரோனா தடுப்பூசி மருந்துகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மாநில அரசுகள் அதிகரித்து வருகின்றன. உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து தேவைக்கேற்ப மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கரோனா தடுப்பூசிகளை பிரித்து வழங்குகிறது.
கரோனா தடுப்பூசி போடும்போது தடுப்பு மருந்துகளும் வீணாகும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி செலுத்தும்போது 1 சதவிகிதத்திற்கும் குறைந்த அளவிலேயே கரோனா தடுப்பு மருந்துகள் வீணாகலாம் என்று வரைமுறை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில் 37.3%, சத்தீஸ்கர் 30.2%, தமிழ்நாடு 15.5%, ஜம்மு - காஷ்மீர் 10.8% தடுப்பு மருந்துகள் வீணாகின்றன. இது மத்திய அரசு நிர்ணயித்த அளவுகளை விட அதிகம் என்று தெரிவித்துள்ளது.