வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்வதே விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு:  ப.சிதம்பரம் கருத்து

புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்


புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 26 -ஆம் தேதியிலிருந்து தில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ள நிலையிலும் கடந்த ஆறு மாதமாகப் போராடி வருகின்றனர். 

கரோனா தொற்று பரவலால் விவசாயிகள் போராட்டத்தையே மறந்துவிட்ட மத்திய அரசுக்கு நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் வகையிலும் மே 26 -ஆம் தேதி நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து விவசாயிகள் திட்டமிட்டபடி தில்லி எல்லைப்பகுதியான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் போராடி வரும் விவசாயிகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ஹரியானா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே விவசாயிகள் போராட்ட பிரச்னைக்கு தீர்வுகாண முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னைள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிப் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய பொல்லாத சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?

அரசு வினை விதைத்தது. வினை தானே விளையும்? மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி" என சிதம்பரம் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com