தவறுகளையும் முறைகேடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைதளங்களுக்குப் புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
இந்த புதிய விதிகள் பாதிக்கப்படும் அல்லது சாதாரண சமூக வலைதள பயனாளர்களுக்கு சாதகமானதாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகள் புதன்கிழமை (மே 26) அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளின்படி, தேவைப்படும் நிலையில் சமூக ஊடகத்தில் சில முக்கியப் பதிவுகளை முதலில் வெளியிட்டவரின் விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆனால் இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தன்மறைப்பு உரிமைக்கு எதிரானது என்று வாட்ஸ்ஆப் புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது,
தவறுகளையும் முறைகேடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் பாதிக்கப்படும் அல்லது சாதாரண சமூக வலைதள பயனாளர்களுக்கு சாதகமானதாகவே இருக்கும்.
தனிமனித உரிமைகளான தனிப்பட்ட தரவுகளுக்கு அரசு மரியாதையையும் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் சாதாரண மக்கள் இந்த விதிமுறைகளால் அச்சமடைய வேண்டாம். விதிகளுக்கு புறம்பாகவும், அரசமைப்பு, சட்டம்- ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை போன்றவற்றிற்கு எதிரான வதந்திகளை முதலில் யார் உருவாக்குவது போன்ற தரவுகளுக்காக மட்டுமே புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.