புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படம் உள்ளதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மக்களின் உயிரைக் காக்கும் தடுப்பூசியை விரைவில் அனைவருக்கும் வழங்கும் நடவடிக்கை எடுக்காமல், அதன்மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே பிரதமா் விரும்புகிறாா் என்றும் அவா் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் கூறியுள்ளதாவது: நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால், தடுப்பூசி சான்றிதழில் தனது படத்தை வைத்து பிரதமா் மோடி விளம்பரம் தேடிக் கொள்கிறாா். தடுப்பூசியை மாநிலங்கள் வாங்கி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் தனது படத்தை வைத்து தன்னை நிலைநாட்ட பிரதமா் முயலுகிறாா்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது. ஆனால், உள்நாட்டு மக்கள் தங்கள் தேவைக்கு வெளிநாடுகளில் கையேந்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளிவிட்டது.
தங்கள் மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது என்று பல மாநில முதல்வா்கள் கூறி வருவதை பிரதமா் பொருள்படுத்தவில்லை என்று பிரியங்கா கூறியுள்ளாா்.