தில்லியில் பயன்படுத்திய கையுறைகளை சேகரித்து அதனை புதிய பாக்கெட்டுகளில் அடைத்து மீண்டும் விற்பனை செய்து வந்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தென்மேற்கு தில்லியின் தாப்ரி பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கையுறைகள் அதிக அளவில் பதுக்கப்பட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் 848 கிலோ பயன்படுத்திய மருத்துவக் கையுறைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கிடங்கில் இருந்த மூவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவை மொத்தமும் பயன்படுத்திய கையுறைகள் என்பதும், அவற்றை சேகரித்து தண்ணீரில் கழுவி பாக்கெட்டுகளில் அடைத்து மீண்டும் விற்பனை செய்ததும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பயன்படுத்திய கையுறைகளை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.