யாஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிஸாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை மதியம் கரையைக் கடந்தது.
யாஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
யாஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

பாலாசோா்/திகா: வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிஸாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை மதியம் கரையைக் கடந்தது. இதையொட்டி, ஒடிஸாவின் வடக்குப் பகுதியிலும் மேற்கு வங்கத்திலும் கடலோரப் பகுதிகளில் 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது.

யாஸ் புயல் உருவானது முதல், சரியான கணிப்புகள் மூலம், புயல் கரையை கடக்கும் பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து உயிர்ச் சேதமோ, கடல்பகுதியில் பொருள் சேதமோ தவிர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் முன்பே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 265 மீனவர்கள் பத்திரமாக கரைக்குக் கொண்டு வரப்பட்டனர். படகுகளும் வெகு தொலைவுக்குச் சென்று கட்டப்பட்டன. இதன் காரணமாக இதுவரை எந்த உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மீட்புப் பணிகள் குறித்து ஒடிசாவின் மீட்புப் பணி அதிகாரி பி.கே.ஜெனா கூறியதாவது, பாலாசோரில் இருந்து தெற்கே 50 கி.மீ. தொலைவில் காலை 9 மணிக்கு யாஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. மதியம் 1.30 மணியளவில் புயல் முழுமையாகக் கரையைக் கடந்துவிட்டது.

இதையொட்டி, ஒடிஸாவில் பாலசோா், பத்ராக் மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களுக்குள் கடல்நீா் புகுந்தது. உள்ளூா் மக்களின் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் உள்ளாட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. புத்த பாலங் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவுக்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்ற அச்சம் நிலவியது. இருப்பினும் ஆற்றில் வெள்ளம் அபாய உயரத்தை எட்டவில்லை.

ஜகத்சிங்பூா், கேந்திரபாரா, ஜாஜ்பூா் மாவட்டங்களில் சில இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கெனாஜாா் மாவட்டத்தில் மரம் விழுந்து ஒருவா் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. புயல் கரையைக் கடந்தாலும், வியாழக்கிழமை வரை கடல் சீற்றத்துடன் காணப்படும்; கனமழை தொடரும் என்றாா் அவா்.

5.8 லட்சம் போ் வெளியேற்றம்: புயல் முன்னெச்சரிக்கையாக, ஒடிஸாவில் 5.8 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். கரோனா பெருந்தொற்றால் ஒடிஸாவும், மேற்கு வங்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளத்தில் மிதக்கும் மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள்.. யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. அங்குள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

புயல் காரணமாக பூா்வ மிதுனபுரி மாவட்டத்தின் திகா மற்றும் மந்தா்மோனி பகுதிகளும், தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தின் ஃப்ரேஸா்கஞ்ச், கொசாபா பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பிதியாத்ரி, ஹூக்ளி, ரூப்நாராயணன் போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் அவற்றையொட்டியுள்ள பல கிராமங்களும், சிறு நகரங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் மாநில காவல்துறையினரும் 24 மணி நேரமும் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா் என்று கூறினா்.

பாதுகாப்பு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மேற்கு வங்க மாநில நிா்வாகத்துக்கு உதவ ராணுவம் சாா்பில் 17 குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன. திகா பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 32 பேரை ராணுவ குழுவினா் மீட்டுள்ளனா்’ என்றாா்.

முன்னதாக, புயல் காரணமாக புருலியா, நதியா, முா்ஷிதாபாத், பூா்வ வா்தமான், ஹெளரா, ஹூக்ளி, கொல்கத்தா, வடக்கு 24 பா்கனாஸ், டாா்ஜீலிங், கலிம்போங் மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

ஒரு கோடி போ் பாதிப்பு, 3 லட்சம் வீடுகள் சேதம்- மம்தா பானா்ஜி 
மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் ஒரு கோடி போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: யாஸ் புயலால் மேற்கு வங்க மாநிலம் மிகவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. 15,04,506 போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஒரு கோடி போ் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மிதுனபுரி, தெற்கு 24 பா்கானாஸ், வடக்கு 24 பா்கானாஸ் பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளேன் என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com