உத்தரப்பிரதேச மாநிலம் எடவாஹ் மாவட்டத்தில், திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மணமேடையில் மணமகள் மரணமடைய, அவரது தங்கையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
எடவாஹ் மாவட்டம் சமஸ்பூர் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்து மாலைகளை மாற்றி, திருமணச் சடங்குகள் நடைபெற்று முடிந்து மங்கல நாண் அணிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென மணமகள் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியான மருத்துவரை வரவழைத்து, மணமகளின் உடல்நிலையை சோதித்ததில், அவர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர் கூறிவிட்டார்.
திருமண வீடு துக்க வீடானது. யாருக்கும் என்னசெய்வது என்று தெரியவில்லை. இந்த நிலையில், இரு வீட்டாரும் ஒரு மனதாக, மணமகளின் தங்கையுடன் திருமணத்தை செய்விக்க முடிவு எடுத்தனர். இதற்கு மணமகன் - மணமகள் இருவரும் ஒப்புக் கொள்ள, மணமகளின் உடல் ஒரு அறையில் வைக்கப்பட்டது. மற்றொரு அறையில் திருமணம் நடைபெற்றது.
இதில் மணமகளின் குடும்பத்தாரின் மனநிலையை நினைத்து, வந்திருந்தவர்கள் பலரும் கண் கலங்கினர். ஓர் அறையில் ஒரு மகள் பிணமாகக் கிடக்க, மற்றொரு அறையில், மற்றொரு மகள் திருமணக் கோலத்தில் இருப்பதைப் பார்த்து இருவேறு மனநிலையில் தவித்ததைப் பார்த்து பலரும் கலங்கி நின்றனர்.