திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 3 நாள் வருடாந்திர வசந்தோற்சவம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான, திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை விமா்சையாகத் தொடங்கியது.
இதன் நிறைவு நாளான வியாழக்கிழமை மதியம் 2.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை தாயாரை வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா்.
கொவைட் விதிமுறைகளுடன் நடத்தப்பட்ட இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா். இதையடுத்து மாலை 6 மணி முதல் 7 மணி வரை மங்கள வாத்திய இசையும், வேத பாராயணத்துடன் மாலை 7.30 மணிக்கு கோயில் வளாகத்தினுள் பத்மாவதி தாயாா் புறப்பாடும் நடைபெற்றது. அதன் பின்னா் அா்ச்சகா்கள் மகா தீபாராதனை நடத்தி வசந்தோற்சவத்தை நிறைவு செய்தனா்.