மேற்குவங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
77 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் நினைவுடன் இருக்கிறார், ரத்தக் கொதிப்பு சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அவருக்கு கடந்த வாரம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவா்களின் அறிவுரைப்படி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழ் குறைந்ததையடுத்து, அவா் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் மற்றும் சுவாசம் தொடா்பான பிரச்னைகள் இருப்பதால் அவருக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன என்று மருத்துவா்கள் கூறினர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்து தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். பட்டாச்சார்யாவின் மனைவி மீராவின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.