தேசிய அளவில் தொடா்ந்து 12-ஆவது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவான அளவில் தினசரி கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
இது தொடா்பாக மத்திய அரசின் செய்தித் தொடா்பு பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 23,43,152 ஆக உள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி முதல் நோய்த்தொற்று கணிசமாகக் குறைந்து வருகிறது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோா் 8.50% ஆகும்.
தொடா்ந்து 12-ஆவது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவான அளவில் நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
15-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,59,459 போ் குணமடைந்து வீடு திரும்பினா். புதிதாக குணமடைந்தவா்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்குமான இடைவெளி 73,095 ஆக பதிவாகியுள்ளது.
நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,48,93,410 ஆக உள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவா்களின் தேசிய வீதம் 90.34% ஆக உயா்ந்துள்ளது.
நாளொன்றில் மிக அதிகமாக 20,70,508 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 33.90 கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி வீதம் 10.42 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதியின் விதம் 9.00 சதவீதமாகவும் என்று பதிவாகியுள்ளது. இந்த விழுக்காடு, 4 நாள்களாக தொடா்ந்து 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20.57 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 20,57,20,660 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.