தர்பாங்கா: பிகார் மாநிலம் தர்பாங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஒரு சில நாள்களில் கரோனா பாதித்த குழந்தை உள்பட 4 குழந்தைகள் பலியாகியுள்ளன.
நான்கு குழந்தைகளுமே மூச்சு விடுவதில் சிரமத்துடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும், நிமோனியா அறிகுறிகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு ஏற்கனவே பல உடல்நலப் பாதிப்புகள் இருந்தன. அதில் ஒரு குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மூன்று குழந்தைகளுக்கும் கரோனா இல்லை என்று பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. உடனடியாக ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தது.
மேலும், சகோதரிகளான மூன்று குழந்தைகள் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகள் மே 29-ம் தேதியும், ஒரு குழந்தை மே 30ம் தேதியும் உயிரிழந்தனர். 3 குழந்தைகளும் சத்துக் குறைபாட்டுடன் நிமோனியா பாதித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.