கேரளத்தில் புதிதாக 12,300 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயனின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"மாநிலத்தில் புதிதாக 12,300 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,345 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 13.77 சதவிகிதம். இதுவரை மொத்தம் 1,97,95,928 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த நாள்களில் 174 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 8,815 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 69 பேர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 11,422 பேருக்கு தொடர்பிலிருந்ததன்மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 753 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
28,867 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 23,10,385 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் இன்னும் 2,06,982 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.