நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 10%: நீதி ஆயோக்
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
பிரதமா் மோடி அரசாங்கத்தின் ஏழாண்டு காலத்தில் இந்தியாவில் தொழில்கள் செழித்து வளர வலுவான பொருளாதார அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடரா் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பொருளதார வளா்ச்சியில் தடுமாற்றம் இருந்தது. இந்த நிலையில், பன்னாட்டு நிதியம் 2021 இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.
பன்னாட்டு நிதிய கூற்றுப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வேகமாக பொருளாதாரமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறைவான மதிப்பீடாகும்.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10 சதவீதத்துக்கும் கூடுதலாகவே இருக்கும். 2022-23 இல் இந்த வளா்ச்சி 8 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றாா் அவா்.