புது தில்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.17,000 கோடி மதிப்பிலான தொகையை விடுவித்துள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் மேலும் கூறியதாவது:
வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்களுக்கு ரூ.17,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதையடுத்து, 2021-22 நிதியாண்டுக்கு இதுவரையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ.60,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவின்படி, நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்குப் பதிலாக ரூ.1.59 லட்சம் கோடி கடன் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் பற்றாக்குறை ரூ.2.59 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021 ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.41 லட்சம் கோடியை எட்டியதே அதிகபட்ச அளவாகும். இந்த நிலையில், கடந்த அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியைத் தொட்டது. இது, 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமலானதிலிருந்து இரண்டாவது உச்சபட்ச வசூலாகும்.