பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹீரோ; பதவி உயர்வு அளித்த இந்திய விமான படை

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு இந்திய விமான படை குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளித்துள்ளது. 
அபிநந்தன் வர்தமான்
அபிநந்தன் வர்தமான்

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாகிஸ்தான் விமான படை உடனான மோதலின்போது அந்நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு இந்திய விமான படை குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளித்துள்ளது. 

பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடைமுறை முடிந்த பின் அவருக்கு முறைப்படி பதவி உயர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 27 தேதி, பாலகோட் வான்வழித் தாக்குதலுக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. அப்போது, இந்திய விமான படை விமானி அபிநந்தன் வர்தமான் ஒரு பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்தியாவின் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலும், அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தான் விமானப்படையின் பதிலடியும் அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கு இடையே போர் சூழும் அச்சத்தைத் தூண்டியது.

அந்த நேரத்தில், இந்திய வீரர் அபிநந்தன் மிக் - 21 வகை போர் விமானத்தைக் கொண்டு பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாரசூட் மூலம் அவர் குதித்துத் தப்பினார். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச அளவில் இந்த சம்பவம் கவனம் பெற்ற நிலையில், மூன்று நாள்களுக்கு பிறகு அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், சில நாட்களுக்கு ஓய்வெடுத்தார்.

இந்தச் சம்பவம் நடந்த சில வாரங்களுக்குள் அவர் மீண்டும் ராணுவத்தில் தனது பணிக்குத் திரும்பினார். முன்னதாக கடந்த ஆண்டு அவருக்கு வீர் சக்ரா விருதும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com