குஜராத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான 700 கிராம் ஹேராயின் கடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக மும்பை விமான நிலையம் அருகே உள்ள சரக்கு வளாகத்தில் போதை தடுப்பு பிரிவினர் ஒருவரை கைது செய்துள்ளது.
இதுகுறித்து போதை தடுப்பு பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், "மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச சரக்கு முனையத்தில் பொட்டலத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் மண்டல பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக அலுவலர்கள், ஒரு பொட்டலத்தில் 700 கிராம் வெள்ளைப் பொடியைக் கண்டுபிடித்தனர். பின்னர், அது ஹேராயின் என தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேதார்நாத் சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
போதைப்பொருள் மருந்துகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொட்டலத்தின் சரக்குதாரரான வதோதராவில் வசிக்கும் கிருஷ்ண முராரி பிரசாதுக்கு மும்பையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் சம்மன் அனுப்பியது.
வாக்குமூலம் அளிக்க அவர் வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது" என்றார்.