மகாராஷ்டிரம் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை பண மோசடி வழக்கில் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரம் மாநில உள்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள மதுபான விடுதி மற்றும் ஓட்டல் உரிமையாளர்களிடம மாதம் ரூ.100 கோடி வசூல் செய்து தர அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்ட வழக்கில் அனில் தேஷ்முக் பதவி விலகினார்.
பின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் சச்சின் வாஸே உதவியுடன் மும்பை மதுபான விடுதி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.70 கோடி வசூல் செய்யப்பட்டதாகவும் அதில் ரூ.4.18 கோடி போலி நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அனில் தேஷ்முக் மீது விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக ஆஜரான அவரிடம் 12 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் அனில் தேஷ்முக் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.