சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் ராணுவப் படையின் முகாம்கள் பல ஆங்காங்கே அமைக்கப்பட்டு வீரர்கள், நக்சல் தீவிரவாதிகளை கண்காணித்து வருகின்றன.
சுக்மா மாவட்டம் மறைகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் துணை ராணுவப்படை முகாமில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பணியில் இருந்த வீரர் ஒருவர், தனது ஏ.கே.47 துப்பாக்கியால் அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரை அழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிஆர்பிஎப் வீரர், சக ஊழியர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.