ராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்தில் தீப்பற்றி எரிந்து 8 பயணிகள் புதன்கிழமை பலியாகினர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியது:
ராஜஸ்தான் மாநிலத்தின் பலோட்ரா என்ற பகுதியிலிருந்து ஜோத்பூர் நோக்கி இன்று காலை 10 மணியளவில் தனியார் பேருந்து கிளம்பியது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
இந்த பேருந்து, பர்மர் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி பேருந்தின் மீது மோதியதில், பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேருந்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர்.
மேலும், 20க்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், அமைச்சர் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.