குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மாநில ஆளுநர்கள் மாநாடு தில்லியில் நாளை நடைபெற உள்ளது.
மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்த மாநாடு நடத்தப்படவில்லை.
இதையடுத்து 2021 ஆம் ஆண்டுக்கான ஆளுநர்கள் மாநாடு தில்லியில் நாளை நடைபெற உள்ளது. ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு நாளை(வியாழக்கிழமை) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் 4-வது மாநாடு இதுவாகும்.
இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.