கரோனா தொடா்பான விதிமுறைகளை மீறியதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் நவம்பா் 12-ஆம் தேதி வரை தில்லியில் 3.16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியாதவா்கள் என்று தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி காவல் துறை சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் தெ0ரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தில்லியில் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் நவம்பா் 12-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கரோனா விதிகளை மீறியதற்காக மொத்தம் 3,16,565 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணியாததற்காக 2,79,878 பேருக்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததற்காக 30,385 பேருக்கும், பொது இடங்களில் மதுபானம், பான், புகையிலை உட்கொண்டதற்காக 3,152 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பியதற்காக 1,685 பேருக்கும், பெரிய பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தியதாக 1,465 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை முகக்கவசம் அணியாததற்காக 181 பேருக்கும், பெரிய பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக ஒருவருக்கும், பொது இடங்களில் மதுபானம், பான், புகையிலை உட்கொண்டதற்காக 19 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் மாதம் தில்லியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து மே 31-ஆம் தேதி முதல் கட்டுமானம், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அரசு அனுமதித்தது. தொடா்ந்து சந்தைகள், மால்கள், மெட்ரோ ரயில்கள், உணவகங்கள், பாா்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன.